பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு 

by Staff Writer 01-02-2019 | 3:35 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற ஆசனத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அனில் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணையிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர தனிப்பட்ட காரணத்தினால் விலகியமை குறிப்பிடத்தக்கது. அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி பணம் ஈட்டும் Lake house Printers & Publishers  தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதால், அவரால் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என தெரிவித்து கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.