மட்டக்களப்பில் விபத்தில் விரிவுரையாளர் பலி

by Staff Writer 31-01-2019 | 8:31 PM
Colombo (News 1st) மட்டக்களப்பில் இன்று (31) இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் - குடியிருப்பு பிரதான வீதியில் இன்று காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றின் மீது தனியார் பஸ் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் விஞ்ஞானப் பிரிவு விரிவுரையாளர் கந்தக்குட்டி கோமலேஸ்வரன் உயிரிழந்துள்ளார். செங்கலடி - சந்தை வீதியிலுள்ள தனது வீட்டில் இருந்து ஆசிரியர் கலாசாலைக்கு செல்வதற்காக இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று ஏறாவூர் - குடியிருப்பு பிரதான வீதியில் அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயது கந்தக்குட்டி கோமலேஸ்வரன், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் விஞ்ஞானப் பிரிவு விரிவுரையாளராக கடந்த 3 வருடங்களாக சேவையாற்றி வந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.