இந்த வருடம் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 31-01-2019 | 7:20 PM
Colombo (News 1st) இந்த வருடம் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை தோல்வியடைச் செய்ய வேண்டியதே தற்போதைய தேவை எனவும் ஜனாதிபதி கூறினார். அரசாங்கத்தை மாற்றும் போது போராட்ட வாசகமாக இருந்த ஊழல், மோசடிகளை தோல்வியடைச் செய்ய முடியவில்லை எனவும் ஊழல்வாதிகள் சக்தி பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்ய முயலும் போது, நாட்டை நேசிக்காமல் சுய இலாபங்களை பெற்றுக்கொள்ள முயலும் தரப்புடன் மோத வேண்டி ஏற்படுவதாகவும் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் வௌிநாட்டு பிரதிநிதிகளையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
எமது கலாசார விடயங்களை அழிக்கும் செயற்பாடுகளில் வௌிநாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அவர்கள் நாட்டின் அரசியலில் தலையிட்டுள்ளனர். அவர்கள் எமது நாட்டின் அபிவிருத்தியில் தலையிட்டுள்ளனர். இதனை அடையாளம் காண வேண்டும். குறிப்பாக இந்த வருடத்தில் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க நீங்கள் அனைவரும் நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுள்ளவர்களை அடையாளம் கண்டு முன்னோக்கி செல்லும் தேவை இருக்கிறது
என ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு அலுவலகம் புஞ்சி பொரளையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.