by Staff Writer 30-01-2019 | 10:14 PM
Colombo (News 1st) கோப் அறிக்கையின் படி ஶ்ரீலங்கன் விமான சேவை கடந்த 9 மாதங்களில் 4 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதமாகும் போது ஶ்ரீலங்கன் விமான சேவை 50 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2010 இல் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை எரிபொருள் விலை அதிகளவில் காணப்பட்ட காலப்பகுதியில் விமான நிலையம் அடைந்த நட்டத்தையும் 2015 ஆம் ஆண்டின் பின்னர் எரிபொருள் விலை குறைந்ததையடுத்து அடைந்துள்ள நட்டத்தையும் நோக்கும் போது தவறான நிர்வாகத் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளமை புலப்படுகிறது.
கடந்த அரசாங்கக் காலத்தில் இந்த விமான சேவைக்கு தமது உறவினர்களை நியமித்து நிறுவனத்தை நட்டத்திற்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், 2012 ஆம் ஆண்டு அரசாங்கம் சீஸ்பெரி என்ற நிறுவனத்திற்கு இலங்கையின் அடுத்த 5 வருடங்களுக்கான விமான சேவை திட்டத்தை வகுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியது.
அதன் பின்னர் இலங்கை கொள்வனவு செய்ய வேண்டிய விமானங்கள் தொடர்பில் அந்த நிறுவனம் பரிந்துரை செய்ததுடன், நன்கு ஆராய்ந்து அந்நிறுவனம் அறிக்கையொன்றையும் வௌியிட்டது.
எனவே, இவ்வளவு ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையை ஒரு மின்னஞ்சல் மூலம் இரத்து செய்வதாக இருந்தால், 100-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கையை விட சிறந்த அறிவு இருக்க வேண்டும் அல்லவா?
மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று பிரதமரின் ஆலோசனையின் படி இதனை இரத்து செய்வதற்கு இதுபோன்று ஆழமாக ஆய்வு செய்யப்பட்டதா?
விமான நிறுவனங்கள் தமது விமான சேவையை விளம்பரப்படுத்தும் போது, அதில் விமானத்தின் சேவைக்காலம் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் என குறுகிய காலத்தையே குறிப்பிடுவர்.
அதன்போதே இந்த விமான சேவை தொடர்பில் மக்கள் மனதை வெல்ல முடியும் என்பதனை அவர்கள் அறிந்துள்ளனர்.
எனினும், புதிய விமானங்களை வைத்துக்கொண்டு பழைய விமானங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
தமக்குத் தேவையான நண்பர்களை நியமித்து செயற்படுவதன் மூலம் தேசிய விமான சேவையை மூட வேண்டும் என்ற தேவை யாருக்காவது இருக்கிறதா?