தாயகம் திரும்பும் மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள்
by Staff Writer 30-01-2019 | 1:21 PM
Colombo (News 1st) மாலியில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் கடமையாற்றிய நிலையில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவரது உடல்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளன.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இராணுவத் தளபதியிடம் மாலை 3.10 மணிக்கு கையளிக்கப்படும் என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் கட்டளைத் தளபதியால் உடல்கள் கையளிக்கப்படவுள்ளன.
இதற்காக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் மூவரும் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தள்ளார்.
மாலியின் டுஎன்ட்ஸா பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் ட்ரக் வண்டி மீது கடந்த 25 ஆம் திகதி தொலைதூரத்திலிருந்து அதி நவீன மற்றும் அதிசக்தி வாய்ந்த தன்னியக்கத் தாக்குதல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இராணுவக் கெப்டன் ஒருவரும் மேலும் ஒரு இராணுவ வீரரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.