குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கண்டுபிடிக்க முடியாமற்போன அர்ஜூன மகேந்திரன் தென்னாபிரிக்க ஊடகத்திற்கு செவ்வி

by Staff Writer 29-01-2019 | 9:14 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தென்னாபிரிக்க ஊடகமொன்றுக்கு நிதி தூய்தாக்கல் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து வௌிவருகின்ற ''பிஸ்னஸ் லைவ்'' இணையத்தளத்திற்கு சர்வதேச வங்கியொன்றுடன் தொடர்புடைய நிதி தூய்தாக்கல் குறித்து அர்ஜுன மகேந்திரன் கருத்துக்களை வௌியிட்டுள்ளார். அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தொழில் முயற்சிகளுக்கு ஆலோசனை வழங்குநராக தற்போது செயற்பட்டு வருகின்றார். அவரை கண்டுபிடிக்க முடியாமற்போனதாக தெரிவிக்கப்பட்டு சுமார் ஒரு வருடமாகின்றது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கண்டுபிடிக்க முடியாமற்போன அர்ஜுன மகேந்திரனை தென்னாபிரிக்க ஊடகம் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் புலப்படுவது இயலாமையா? கரிசனையின்மையா?