கிண்ணியாவில் வான் ​நோக்கி துப்பாக்கிச்சூடு

கிண்ணியாவில் அமைதியின்மை: வான் ​நோக்கி துப்பாக்கிச்சூடு

by Staff Writer 29-01-2019 | 1:42 PM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா, கண்டல்காடு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்கு கடற்படையினரால் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர், லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார். கிண்ணியாவில் மகாவலி ஆற்றை அண்மித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பில்  ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதிக்கும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தினரிடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று அதிகாலை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களை கடற்படையினர் கைப்பற்றியதாக கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார். இதன்பின்னர் குறித்த பகுதியில் மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினரால் மீண்டும் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் தப்பிச்சென்றுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்