பாடப்புத்தக விநியோகம் தொடர்பில் கோரிக்கை

மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் குறித்து ஆசிரியர் சங்கம் கோரிக்கை

by Staff Writer 27-01-2019 | 12:13 PM
Colombo (News 1st) இந்த வருடத்திற்கான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் மேல், வட மத்திய, மத்திய மாகாணங்களில் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, 97 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் பத்மினி நாலிகா தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான புத்தங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கையேடுகள், அச்சகத்திற்கு அனுப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்களுக்கான கையேடுகள் விநியோகிக்கப்படுவதாகவும் பத்மினி நாலிகா தெரிவித்துள்ளார். இதேவேளை, மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் கிடைக்காத பட்சத்தில் பாடசாலை அதிபர் ஊடாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.