படைப்புழுவை ஒழிப்பதற்கான உபகரணங்கள் இறக்குமதி

மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு வேண்டுகோள்

by Staff Writer 27-01-2019 | 7:28 AM
Colombo (News 1st) படைப்புழுவை ஒழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை, பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், வெற்றியளித்துள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது படைப்புழு பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, மறு அறிவித்தல் வரை சிறுபோகத்தின்போது சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறும் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சோளப் பயிர்ச்செய்கையில் வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள சோளப் பயிர்ச்செய்கைகள், படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சோளப்பயிர் தவிர்த்த, பிற பயிர்களிலும் இந்தப் புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.