பிரேசிலில் அணை உடைந்து 9 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் அணை உடைந்து 9 பேர் உயிரிழப்பு, 300 பேரை காணவில்லை

by Bella Dalima 26-01-2019 | 5:41 PM
பிரேசிலில் அணை உடைந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300 பேர் வரை காணாமற்போயுள்ளனர். காணாமற்போனவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. பிரேசில் நாட்டின் புரு மாடின்கோ நகரம் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று (25) இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதன்போது திடீரென அணை உடைந்துள்ளது. உடனே அணையிலிருந்து தண்ணீரும் சேறும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வெளியேறியுள்ளது. இச்சம்பவத்தில் இரும்புத்தாது சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர 300 பேரைக் காணவில்லை. அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் நிலவுகிறது.