பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்

by Bella Dalima 25-01-2019 | 4:49 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 700 ரூபாவாகவும், விலைக்கொடுப்பனவு 50 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ தேயிலைக்கான கொடுப்பனவாக 40 ரூபாவை வழங்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான மொத்த சம்பளமாக 855 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) கைச்சாத்திடப்படவுள்ளது.