ஹெரோயின் கடத்தற்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாட்டிலிருந்து தப்பிச்சென்ற 24 பேர் ஹெரோயின் கடத்தற்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Staff Writer 25-01-2019 | 4:19 PM
Colombo (News 1st) நாட்டிலிருந்து தப்பிச்சென்ற 24 பேர் ஹெரோயின் கடத்தற்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார். 2006, (5) ஆம் இலக்க நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் பிரகாரம், குறித்த கடத்தற்காரர்களின் சொத்துக்கள், நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். இதேவேளை, இந்த மாதத்திற்குள் மாத்திரம் 107 கிலோகிராம் 351 கிராம் ஹெரோயினுடன் 2,895 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.