பிளட்டினம் விருது வழங்கல் விழா: வட மாகாணத்தின் அதிசிறந்த வீராங்கனையாக ஆஷிகா தெரிவு

by Staff Writer 22-01-2019 | 2:00 PM
Colombo (News 1st) பிளட்டினம் விருது வழங்கல் விழாவில், 7ஆம் நாளுக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில் வட மாகாணத்தின் அதிசிறந்த வீராங்கனையாக விஜயபாஷ்கர் ஆஷிகா தெரிவாகியுள்ளார். இவ்வருட பிளட்டினம் விருது வழங்கல் விழாவுக்கு, உலகின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ் நிறுவனம் அணுசரணை வழங்குகின்றது. தேசிய ரீதியில் விளையாட்டுத்துறையில் பிரகாசித்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் பொருட்டு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் பிளட்டினம் விருது வழங்கல் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. மூன்றாவது தடவையாகவும் நடாத்தப்படவுள்ள பிளட்டினம் விருது வழங்கல் விழா எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி ரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் 7ஆம் நாளுக்கான நிகழ்வுகள் யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இன்று (22) காலை முன்னெடுக்கப்பட்டது. கடந்த வருடத்தில் தேசிய மட்ட பளூதூக்கல் போட்டிகளில் சாதனைகள் பலவற்றை நிலைநாட்டிய சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் விஜயபாஷ்கர் ஆஷிகா வட மாகாணத்தின் அதிசிறந்த வீராங்கனைக்கான தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். யாழ். ஹாட்லி கல்லூரியின் குண்டெறிதல் வீரரான சிவகுமார் பிரகாஷ்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் பளூதூக்கல் வீராங்கனையான டிலோஜினி பிரதாபன் வெண்கலப் பதக்கத்தையும் வெற்றிபெற்றுள்ளார்.