நுவரெலியா - வலப்பனை பகுதியிலும் படைப்புழு வியாபித்துள்ளது.
வலப்பனை - தெரிபெஹே பகுதியில் சோளப்பயிர்ச்செய்கை காணியில் படைப்புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சோளப்பயிர்ச் செய்கையை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் முதன்முதலாக, கடந்த வாரம் ஹற்றன் - ருவன்புர பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை, சோளத்தை கொண்டுசெல்லும் சந்தர்ப்பங்களில் அதற்கான விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, ரோஹன புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் படைப்புழுக்களில் சோளப்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலை, பாலையடி பகுதியில் படைப்புழுக்களால் கோவா செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை ஒழிப்பதற்காக மாவட்ட மட்டத்தில் 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.