விடைத்தாள் மீள்பரிசீலனை நடைமுறையில் திருத்தம்

பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை நடைமுறையில் திருத்தங்கள் அவசியம்

by Staff Writer 20-01-2019 | 1:07 PM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை, உயர்தரப் பரீட்சை உள்ளிட்ட தேசிய ரீதியில் நடைபெறும் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்யும் நடைமுறையில் திருத்தங்கள் அவசியம் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய மாணவியின் விடைத்தாளை மீள் பரிசீலனை செய்யுமாறு அண்மையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் இது புலப்படுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி, தமது ஆங்கிலப் பாட பரீட்சை பெறுபேறுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விடைத்தாளை மீள் பரிசீலனை செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜிதவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, விடைத்தாள்களை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் நடைமுறை முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.