வடக்கு, கிழக்கில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 19-01-2019 | 3:59 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 10,000 வீட்டுத் திட்டத்தில் 4750 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலகங்களூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்காக முழுமையாக செங்கல் மற்றும் சீமந்தால் இந்த வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி அறிக்கையொன்றினூடாகக் குறிப்பிட்டுள்ளார். தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 4750 வீடுகள் முதல் கட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் 1500 வீடுகளும் கிளிநொச்சியில் 670 வீடுகளும் முல்லைத்தீவில் 630 வீடுகளும் வவுனியாவில் 450 வீடுகளும் மன்னாரில் 350 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதேவேளை, திருகோணமலையில் 400 வீடுகளும் மட்டக்களப்பில் 625 வீடுகளும் அம்பாறையில் 125 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மற்றும் தமிழக அகதி முகாம்களிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு இந்த வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்யும் வகையில், கடந்த 15 ஆம் தகிதி முதல் இந்த வீட்டுத்திட்ட நிர்மாண செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.