ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம்

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு

by Bella Dalima 19-01-2019 | 5:25 PM
தனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஒன்றுகூடி ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றிய விவாதத்தில் ஈடுப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையின் படி, அபராதம் விதிக்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பூதாகாரமாய் வெடித்த கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை தொடர்ந்து முதன்முறையாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இம்முறை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்படவிருக்கும் அபராதத் தொகை 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டதை விட அதிகளவு நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. கடந்த முறை கூகுள் நிறுவனத்திற்கு 2.25 கோடி டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் 5 பேர் அடங்கிய விசாரணைக்குழு ஃபேஸ்புக் நிறுவனம் மீது மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த விபரங்களுடன் விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், அபராதத் தொகை பற்றி இன்னும் முடிவு எட்டப்படவில்லை.