by Staff Writer 19-01-2019 | 3:35 PM
Colombo (News 1st) படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையால், விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் தெரிவித்தார்.
சுமார் 100 வகையான பயிர்செய்கையை படைப்புழு தாக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் சோளம் உள்ளிட்ட சில துணைப் பயிர்செய்கையை படைப்புழுக்கள் அதிகளவில் தாக்கியுள்ளதாகவும் விவசாய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
சுமார் 45,000 ஹெக்டெயர் அளவான சோளச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சோளம்சார் உணவுப் பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைக்கூடும் என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் தெரிவித்தார்.
படைப்புழுவின் தாக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த மூன்று நாட்களாக நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அம்பாறை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.