புத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை தடுத்து வைத்து விசாரணை

by Staff Writer 18-01-2019 | 6:56 PM
Colombo (News 1st) புத்தளம் - வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவனல்லையில் அண்மையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் தென்னம் தோப்பு ஒன்றில் மறைந்திருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கு ஏற்ப, விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் நேற்று (17) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்த 20 முதல் 25 வயதிற்கு இடைப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தை தொடர்ந்து பரிசோதித்த போதே புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 100 கிலோகிரோம் வெடிபொருட்கள் அடங்கிய 3 பெரல்களும், நைட்டிக் திரவியம் அடங்கிய 6 பெரல்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 99 டெட்டனைட்டர்களும், வாயு ரைஃபில் ஒன்றும், ஒரு வேட்டைத் துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 7 தோட்டாக்களும் நவீன ரக கெமரா ஒன்றும் மடிக்கணணி ஒன்றும் தமிழ் மற்றும் அரபு மொழியில் அச்சிடப்பட்ட புத்தகங்களும் வீசா அனுமதிச்சீட்டு உள்ளிட்ட பல பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நால்வரில் தென்னந்தோப்பு உரிமையாளரின் மகனும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தலைமையில் இன்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு ஏற்ப 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.