பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளைக் கையளிக்க நடவடிக்கை

by Staff Writer 17-01-2019 | 10:05 AM
Colombo (News 1st) வடக்கில் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டுள்ள 1,201 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றினூடாக இலங்கை இராணுவம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வொன்றில், குறித்த காணிகள் கையளிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் காணியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் காணியும் யாழ்ப்பாணத்தில் 46 ஏக்கர் காணியும் வன்னியில் 63 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணியில் இதுவரை காலம் இலங்கை இராணுவத்திணர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இராணுவப் பண்ணைகள் காணப்பட்ட நாச்சிக்குடா, வெல்லன்குளம், உடையார்கட்டுகுளம் ஆகிய இடங்களும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.