வலப்பனையில் வர்த்தக செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

மின் விநியோகத் துண்டிப்பால் வலப்பனை நகரின் வர்த்தக, நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

by Staff Writer 16-01-2019 | 3:36 PM
Colombo (News 1st) மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் வலப்பனை நகரில் அரச மற்றும் வர்த்தக நிறுவனங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. நேற்றிரவு (15) முதல் மின்சார விநியோகம் துணடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இதன் காரணமாக வலப்பனை நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். வாரத்திற்கு ஒரு முறை சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அதற்கமைய இன்றைய தினம் சிவில் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரமின்மை காரணமாக விசாரணைகள் தடைப்பட்டதாக சட்டத்தரணி தம்மிக்க அபோன்சு குறிப்பிட்டார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள மின்பிறப்பாக்கி ஒன்றை இணைத்துத் தருமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தனவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. வலப்பனை பகுதிக்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் 33,000 வோல்ட் மின்கம்பியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மின்சார விநியோகத்தை வழமைக்கு திருப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.