பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்திரிபால: 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து

by Staff Writer 16-01-2019 | 7:34 PM
Colombo (News 1st) பிலிப்பைன்ஸிற்கு நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேவை (Rodrigo Duterte) சந்தித்துள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15) இரவு மணிலா விமான நிலையத்தை அடைந்த போது, அந்நாட்டு வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேயின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பின் போது ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம் மற்றும் கல்வி ஒத்திழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிட்டும் வகையில், உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் தூதரகமொன்றை கொழும்பில் ஸ்தாபிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார வர்த்தக உறவுகளை புதிய திட்டங்கள் மூலம் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார சபையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பிலிப்பைன்ஸின் தேசிய வீரர்களை நினைவுகூரும் நினைவுத்தூபிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.