பயிர்களை பாதுகாப்பதற்கான தேசிய திட்டம்

படைப்புழு தாக்கத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க நியூஸ்ஃபெஸ்ட்டின் தேசிய திட்டம்

by Staff Writer 16-01-2019 | 7:09 AM
Colombo (News1st) படைப்புழுவின் தாக்கத்திலிருந்து சோளம் மற்றும் நெல் பயிர்ச் செய்கையாளர்களைப் பாதுகாக்க இன்று முதல் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை முன்னெடுக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயத் திணைக்களம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை ஆகியன இணைந்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ​பேராசிரியர் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரக்கோன் தெரிவித்துள்ளார். சோளச் செய்கையில் பரவிவந்த படைப்புளுவின் தாக்கம் தற்போது நெல், கரும்பு மற்றும் மரக்கறி செய்கைகளையும் பாதிக்கும் என விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். சோளச் செய்கையில் பரவிவந்த படைப்புளுவின் தாக்கம் தற்போது குரக்கன், பயறு போன்ற செய்கைகளையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது. இரசாயனக் கொல்லிகளை முறையாகப் பயன்படுத்துவது இதன்போது மிகவும் முக்கியமானது எனவும் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். விவசாயத் துறையை பாதித்துள்ள இந்தத் தொற்றுநிலைமையை எதிர்கொள்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என கருதிய நியூஸ்பெஸ்ட் ஆரம்பித்த தேசிய திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது. போராதனை பல்கலைகக்கழகத்தின் விவசாய பீடத்துடன் இணைந்து விசேட ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சோளப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் மாவட்டங்களில் இந்த விசேட ஆய்வுகள் இடம்பெறவுள்ளன. இதன்நிமித்தம், நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் அனுராதபுரம், மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இன்று விசேட ஆய்வுகளை முன்னெடுக்கின்றனர். 3 விசேட ஆய்வுக் குழுக்கள் மொனராகலை, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளன.