நாலக்க, மர்சிலி தோமஸின் விளக்கமறியல் நீடிப்பு

நாலக்க டி சில்வா, இந்திய பிரஜை மர்சிலி தோமஸின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 16-01-2019 | 4:08 PM
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய பிரஜை மர்சிலி தோமஸ் ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்ப்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் முதலாவது சந்தேகநபரான மர்சிலி தோமஸுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவருடைய மனைவி சஷி வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகிய மூவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர்களை அழைத்துள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என கடந்த 4 ஆம் திகதி நாமல் குமாரவிற்கு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவரிடம் சமர்ப்பித்துள்ளதாக தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் முனசிங்க நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமது திணைக்களத்தினூடாக சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகளுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, குரல் பதிவின் மாதிரியை பெறுவதற்காக கடந்த 14 ஆம் திகதி அரச பகுப்பாய்வாளரிடம் நாமல் குமார அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்