by Staff Writer 16-01-2019 | 1:18 PM
Colombo (News1st) பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு எதிராக, தொலைபேசி கலந்துரையாடல் அறிக்கையைப் பெற்று விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு இன்று (16) அறிவித்துள்ளனர்.
கொழும்பு - கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சார்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இன்று மன்றில் ஆவணங்களை சமர்பித்தார்.
இதேவேளை, ரவீந்திர விஜேகுணரத்ன கடற்படையிலிருந்து விலகியதன் பின்னர், கடற்படைத் தலைமையகத்தின் அதிகாரிகளுக்கான வீடமைப்பில் 709ஆம் இலக்க அறையை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கடற்படை அதிகாரி ஒருவருக்கு பாதுகாப்புப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் சாட்சியாளரை அச்சுருத்தியதாக, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.