இலங்கையில் தமிழக மீனவரின் சடலம் மீட்பு

இலங்கையில் தமிழக மீனவரின் சடலம்: இராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

by Staff Writer 15-01-2019 | 7:46 PM
Colombo (News 1st) இலங்கையில் தமிழக மீனவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். நெடுந்தீவிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்று (14) முன்னெடுத்த தேடுதலின் போது இந்திய மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. தமிழகத்தின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா முன்னுசாமி என்ற 55 வயதான மீனவரே சடலமாக மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் விபத்திற்குள்ளான படகொன்றில் இருந்த ஐந்து மீனவர்களை கடற்படையினர் மீட்டு அழைத்து வந்தபோது அவர்களின் படகு நீரில் மூழ்கியுள்ளது. நீரில் மூழ்கிய ஐந்து மீனவர்களையும் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இதன்போது, இந்திய மீனவர்களின் மற்றுமொரு படகில் இருந்தவர்கள் கடற்படையின் படகை மோதிவிட்டுத் தப்பிச் செல்ல முயற்சித்தபோது அந்தப் படகு கவிழ்ந்துள்ளது. அப்படகில் இருந்த மூன்று மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கை கடற்படையினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த மீனவரின் சடலத்தை இறுதிக்கிரியைகளுக்காக இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் இதன்போது மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.