அரச நிறுவன நியமன பெயர்ப்பட்டியல் கோரி அறிவிப்பு

அரச நிறுவன நியமனங்களுக்கான பெயர்ப்பட்டியலை வழங்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிப்பு

by Staff Writer 15-01-2019 | 5:11 PM
Colombo (News 1st) கூட்டுத்தாபனம், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான பெயர்ப்பட்டியலை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் தொடர்பிலான பரிந்துரைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை (16) கூடவுள்ளது. சபைகள் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் கடந்த 31 ஆம் திகதி ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ தெரிவித்தார். குறித்த குழுவின் தலைவராக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன செயற்படுவதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஜே. எஸ். கருணாரத்ன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டத்தரணி விஸ்வா சப்தர மற்றும் அரச திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.ஆர். தேஷப்பிரிய உள்ளிட்டோர் குறித்த குழுவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.