by Bella Dalima 12-01-2019 | 3:29 PM
Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், களுவாஞ்சிக்குடி, வெலிகம, வாதுவ பகுதிகளில் வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
யாழ் - நல்லூர் அரசடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் சைக்கிளொன்றும் மோதியதில் நேற்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த 72 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - போரத்தீவு, பலுகாமம் வீதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் பலுகாமம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, காலி - மாத்தறை பிரதான வீதியில் லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.
வீதியை விட்டு விலகிச்சென்ற லொறி, வீதியில் பயணித்த மூன்று பெண்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய சாரதியை பிரதேச மக்கள் தாக்கியதில், அவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலி கொழும்பு பிரதான வீதியின் தல்பிட்டி சந்தியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் 18 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.