மீட்டரின்றி சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்

யாழில் மீட்டர் பொருத்தாது சேவையில் ஈடுபட்டு வரும் முச்சக்கரவண்டிகள்

by Staff Writer 12-01-2019 | 7:21 PM
Colombo (News 1st) முச்சக்கரவண்டிகளுக்கு டாக்ஸி மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட நிலையிலும், யாழ். மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகள் மீட்டர் பொருத்தாது சேவையில் ஈடுபட்டு வருகின்றன. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டிகளுக்கு டாக்ஸி மீட்டர் பொருத்தப்படுதை கட்டாயமாக்கும் அறிவித்தல் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பயண நிறைவின் போது பயணிகள் கட்டணம் செலுத்திய பின்னர் பயணிகளின் விருப்பத்திற்கு அமைய பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணித்த தூரம், வாகன பதிவு இலக்கம், அறிவிடப்பட்ட தொகை மற்றும் பயண திகதி என்பன பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருத்தல் அவசியம் எனவும் வர்த்தமானியில் வௌியிடப்பட்டிருந்தது. வர்த்தமானியில் இது வௌியிடப்பட்டு ஒரு வருட காலத்தினை கடந்த நிலையிலும், யாழ். மாவட்டத்திலுள்ள பயணிகளை ஏற்றிச்செல்லும் பெரும்பாலான முச்சக்கரவண்டிகளில் இதுவரை மீட்டர் பொருத்தப்படாததை காண முடிகின்றது. யாழ். மாவட்டத்திலுள்ள ஒரு சில முச்சக்கரவண்டிகள் மாத்திரம் மீட்டர் பொருத்தப்பட்டு சேவையில் ஈடுபட்டு வருகின்றன.