பஸ்களை சுற்றிவளைக்க நடவடிக்கை

புதிய கட்டணங்களுக்கமைய பஸ் கட்டணங்களை அறவிடாத பஸ்களை சுற்றிவளைக்க நடவடிக்கை

by Bella Dalima 12-01-2019 | 4:26 PM
Colombo (News 1st) புதிய கட்டணங்களுக்கமைய பஸ் கட்டணங்களை அறவிடாத பஸ்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளது. பஸ் கட்டணங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, நாளை மறுதினம் (14) முதல் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகவும் நாளை மறுதினம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபையின் தலைவர் துசிச குலரத்ன குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்திற்குட்பட்ட 475 மார்க்கங்களில் சுமார் 5,500 பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்குள்ளாகும் பட்சத்தில் அது குறித்து அறிவிப்பதற்கு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தமது முறைப்பாடுகளை, 011 2 860 860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.