by Bella Dalima 12-01-2019 | 4:15 PM
Colombo (News 1st) மாத்தறை - கதிர்காமம் அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் காரணமாக சொத்துக்களை இழந்தவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிர்மாணப்பணிகள் காரணமாக சொத்துக்களை இழந்த தமக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை என ஹம்பாந்தோட்டை - சூரியவெவ 550 பிரிவு கிராம மக்கள் நேற்று (11) எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களம் ஆகியவற்றின் மதிப்பீடுகளின் மூலம் இழப்பீடுகள் வழங்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குள் இழப்பீடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.