by Staff Writer 12-01-2019 | 5:29 PM
Colombo (News 1st) சக்தி, சிரச, TV1, நியூஸ்ஃபெஸ்ட் தலைமையக வாயிலில் சிலர் முறையற்ற விதத்தில் செயற்பட்டமைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டன அறிக்கை வௌியிட்டுள்ளது.
ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் நிறுத்தி, ஊடகங்கள் தமது பணியை எவ்வித தடையுமின்றி முன்கொண்டு செல்ல ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரு நாட்டின் ஜனநாயம் மதிக்கப்படும் நிலையிருக்குமானால், அந்நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கும். ஆனால், இன்று இந்நாட்டில் ஊடகங்கள் மீதான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் ஜனநாயகம் இல்லாத நிலையினேயே காட்டிநிற்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இந்நாட்டில் மிகவும் கொடூரமான அராஜகங்கள் நடைபெற்றபோது அதனை எதிர்த்து ஊடகங்கள் மட்டுமே செயற்பட்டதாகவும், அதன் காரணமாகவே நாட்டில் ஜனநாயகம் மலர்ந்து நல்லாட்சி ஏற்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், அவற்றையெல்லாம் மறந்து இன்று முன்னைய காலத்தைப் போன்றே ஊடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதையும் ஊடகவியலாளர்களுக்கு அழுத்தங்கள் விடுக்கப்படுவதையும் எந்தவொரு ஜனநாயக சக்தியும் ஏற்றுக்கொள்ளாது என அதில் கூறப்பட்டுள்ளது.
ஊடகம் தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள் இருக்குமானால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லமுடியும் எனவும் அதனைவிடுத்து ஊடகங்களை அச்சுறுத்துவது என்பது இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.