வெனிசுலா அதிபராக மடுரோ மீண்டும் பதவியேற்பு

விமர்சனங்களுக்கு மத்தியில் வெனிசுலா அதிபராக மடுரோ மீண்டும் பதவியேற்பு

by Bella Dalima 11-01-2019 | 4:51 PM
சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடுரோ நேற்று (10) இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார் தலைநகர் கராகஸ் நகரில் உள்ள உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி மைக்கேல் மொரீனோ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் கியூபா, பொலிவியா நாடுகளின் அதிபர்கள் உட்பட 94 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எனினும், கனடா மற்றும் சில தென் அமெரிக்க நாடுகள், அவர் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்பதை அங்கீகரிக்கவில்லை. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த மே மாதம் அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. நடந்து முடிந்த அந்த தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலை தாங்கள் புறக்கணித்ததன் காரணமாக, மடுரோ பெற்றுள்ள வெற்றி சட்டவிரோதமானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த சில ஆண்டுகளாக, அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. இதனால், வரலாறு காணாத அளவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. இதற்கு மடுரோவின் சர்வாதிகாரப் போக்கே காரணம் என்று எதிர்க்கட்சிகளும் உலக நாடுகளும் விமர்சித்து வருகின்றன.