ரில்வினுக்கு இழப்பீடு: விமல் வீரவன்சவிற்கு உத்தரவு

ரில்வின் சில்வாவிற்கு 10 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும்: விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 11-01-2019 | 3:46 PM
Colombo (News 1st) புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட விமல் வீரவன்ச, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு 10 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு வணிக மேல்நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்னாண்டோவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச அவரது பெயரில் வௌியிட்ட நூல் ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும், அவர் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த போது தாம் நிறைவேற்றுக்குழுவில் முன்வைத்த கருத்துக்கள் என தெரிவித்தே ரில்வின் சில்வா இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். கடந்த 10 வருடங்களுக்கும் அதிகக் காலம் கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நூலின் சொத்துரிமை ரில்வின் சில்வாவிற்கே உரித்தானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.