முகங்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பின்னால் இருப்பது யார்?

by Staff Writer 11-01-2019 | 7:42 PM
Colombo (News 1st) முகத்தை மூடியவாறு வருகை தந்து சிவில் அமைப்புகள் என தம்மை அடையாளங்காட்டிக்கொண்ட சிலர் நேற்று (10) ஊடக நிறுவனங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊடகங்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக வருகை தந்த இந்தக் குழுவினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து ஜனநாயகத்தை மீள உருவாக்குமாறு கோரி சில இடங்களில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களாவர். கடந்த நவம்பர் 18 ஆம் திகதி கொட்டும் மழையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக குழுமி தம்மை இலங்கை பெண்கள் என அடையாளம் காட்டிக்கொண்டவர்களும் இக்குழுவில் அடங்குவர். இதேவேளை, நவம்பர் 29 ஆம் திகதி திதுலன ஹதவத்த என்ற குழுவினர் முகங்களை மூடியவாறு மீண்டும் ஜனாதிபதி காரியாலயத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். ஊடக நிறுவனங்களுக்கு முன்பாக நேற்று எதிர்ப்பில் ஈடுபட்ட பெரும்பாலானோர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினைக் கைவிட்டனர். கறுப்பு ஊடகம் என சிலர் எச்சரிக்கை விடுத்திருந்த பின்புலத்திலேயே இவர்கள் ஊடக நிறுவனங்களுக்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இவர்களின் பின்னால் இருப்பது யார்? இவர்கள் நிறைவேற்றுவது யாருடைய தேவையை?

ஏனைய செய்திகள்