சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 22 பேர் பலி

சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

by Bella Dalima 11-01-2019 | 6:25 PM
சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது. சூடானில் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க கலவரத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டதுடன், பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.