ரவிராஜ் கொலை: மேன்முறையீடு பரிசீலிக்கப்படவுள்ளது

ரவிராஜ் கொலை: பிரதிவாதிகளின் விடுதலைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவு

by Staff Writer 10-01-2019 | 6:55 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை இந்த மாதம் 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அச்சல வெங்கப்புலி இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த மேன்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு இதுவரை அறிவித்தல் கிடைக்கவில்லை என மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிக்கு அறிவித்தலைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பிரதிவாதிகளையும் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது. மேல் நீதிமன்றத்தின் தீரப்பிற்கு எதிராக சசிக்கலா நடராஜினால் மேன்முறையீடு செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.