பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை: பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவு

by Staff Writer 10-01-2019 | 8:17 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான இன்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 625 ரூபா முதல் படிப்படியாக வருடாந்தம் 25 ரூபா வீதம் அதிகரிப்பது தொடர்பிலும் இன்றைய பேச்சுவார்த்தையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் தயா கமகே இன்று காலை முதலாளிமார் சம்மேளன உறுப்பினர்களை சந்தித்துள்ளார். அதன் பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்த சந்திப்பை அடுத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1200 ரூபா வருமானம் கிடைக்கும் வகையிலான வெற்றிகரமான கலந்துரையாடல் நடைபெற்றதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். இன்றைய பேச்சுவார்த்தை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் இன்றும் ஊடகங்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கவில்லை.

ஏனைய செய்திகள்