மன்னார் மனிதப் புதைகுழி: தொடை எலும்பு, பற்களின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

by Staff Writer 09-01-2019 | 5:45 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. மன்னார் சதொச வாளகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் 128 நாட்களாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது 288 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகளை ஆய்வுகளுக்காக இம்மாதம் 23 ஆம் திகதி புளோரிடா மாநிலத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். அதிக செலவு காரணமாக அதிகமான எலும்புக்கூடுகளை அனுப்பி வைக்க முடியாது என்பதால், 6 மாதிரிகளை மாத்திரம் அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக எலும்புக்கூடுகளின் தொடை எலும்புகளின் மாதிரிகளையும், சில பற்களின் மாதிரிகளையும் அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார். அகழ்வுப் பணிகளுக்காக எல்லையிடப்பட்ட பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதால், வேலிகளை அகற்றி அகழ்வுப் பகுதியை அகலப்படுத்தியுள்ளதாகவும் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.