மது போதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி மீது வழக்கு

மது போதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி மீது வழக்குத் தாக்கல்

by Bella Dalima 09-01-2019 | 4:39 PM
சென்னை - சூளைமேட்டில் மதுபோதையில் காரை ஓட்டிச்சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி. இவர் தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சக்தி நேற்று (08) மாலை 3 மணிக்கு சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் சென்றுகொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். இதை கவனித்த அப்பகுதி மக்கள் சக்தியின் காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய சக்தியின் காரை பறிமுதல் செய்தனர். மேலும், மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சக்தி மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவரை பிணையில் விடுவித்துள்ளனர்.