மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக எவ்வாறு செயற்பட முடியும்: த.தே.கூ கேள்வி

by Staff Writer 08-01-2019 | 9:36 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பிலான தமது தீர்மானத்தில் மாற்றமில்லை என சபாநாயகர் மீண்டும் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்தில் சாந்த பண்டார புதிய பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஹிஸ்புல்லா இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சபாநாயகரின் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சபாநாயகரின் தீர்மானமே செல்லுபடியாகும் எனவும் நீதிமன்றத்தை இதனுடன் தொடர்புபடுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில், ஜனாதிபதி அரச தலைவராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயற்படுவதாக தமிழ் ​தேசியக் கூட்டமைப்பு இன்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரென கூறப்படுகின்ற மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே சந்தர்ப்பத்தில் அரச தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் எவ்வாறு செயற்பட முடியும் என பாராளுமன்றம் ஜனாதிபதியிடம் வினவ வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.