by Fazlullah Mubarak 06-01-2019 | 6:10 PM
வௌிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றிவந்த விமானம் ஒன்று, அனுமதியின்றி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
சீனா , சிங்கப்பூர் ,ஹொங்கொங் முதலீட்டாளர்களை ஏற்றிவந்த குறித்த விமானம், கடந்த 3 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், பின்னர் விசேட அனுமதியுடன் திருகோணமலை - சீனக்குடா துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பின்னர் குறித்த விமானம் நாட்டின் அனுமதி பெறாத விமான நிலையம் ஒன்றிலிருந்து நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்திற்கமைய வௌிநாட்டு விமானம் ஒன்று அனுமதி பெறாத விமான நிலையம் ஒன்றிலிருந்து
நாட்டிலிருந்து வௌியேற முடியாது.
எனவே, இந்த விமானம் உரிய முறைகளை பின்பற்றி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக கப்பல்களுக்கு வழங்கப்படும் அனுமதியைப் பெற்று குறித்து இந்த விமானம் வௌியேறியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டுக்கு தகவல் கிடைத்துள்ளது.