மின்தூக்கி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மின்தூக்கி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 02-01-2019 | 3:08 PM
Colombo (News 1st) றக்பி வீரர் ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைந்த மின்தூக்கியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அரச பொறியியலாளர் சங்கத்தின் தொழினுட்பக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில், குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இடம்பெற்ற கொழும்பு - 2, நவம் மாவத்தையில் அமைந்துள்ள இரவுநேர களியாட்ட விடுதிக்கு குறித்த குழுவினர் நேற்று முன்தினம் சென்று கண்காணித்துள்ளனர். மின்தூக்கியில் எவ்வாறு விபத்து இடம்பெற்றிருக்கக் கூடும் என்பது தொடர்பில் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். இதேவேளை, இந்த விபத்து தொடர்பில் இதுவரை 20 பேரிடம் சாட்சிப்பதிவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 29 ஆம் திகதி அதிகாலை கொழும்பு -2, நவம் மாவத்தையில் இரவுநேர களியாட்ட விடுதி அமைந்துள்ள கட்டடத்தின் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் 24 வயதுடைய றக்பி வீரரொருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது