அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின: அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

by Staff Writer 30-12-2018 | 7:29 AM
Colombo (News 1st) 2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வௌியாகின. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில், கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையின் கலனி சமுத்ரா ராஜபக்ஸ அதிசிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார். அதேநேரம், மாத்தளை ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் ரிஸ்மி மொஹமட் ஹக்கீம் கரீம் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். பெளதீக விஞ்ஞானப் பாடத்தில் அதிசிறந்த பெறுபேறுகளை, கொழும்பு விசாகா மகளிர் பாடசாலையின் சத்துனி ஹன்சனி வசந்தா விஜேகுணவர்தன பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, குருணாகலை மலியதேவ கல்லூரியை சேர்ந்த கசுன் இந்துரங்க விக்கிரமரத்ன வர்த்தகப் பிரிவில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார். இதேவேளை, கலைப்பிரிவில் பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலையின் தம்யா டி அல்விஸ் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன், பொறியியல் தொழிநுட்பவியலில், கொழும்பு ஆனந்தா கல்லூரியை சேர்ந்த பமுதித்த யசஸ் பத்திரன அதிசிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உயிர்முறைமைகள் தொழிநுட்பவியல் பிரிவில், கம்புறுப்பிட்டிய நாரன்தெனிய பாடசாலையின் சந்துனி பியுமாஷா கொடிப்பிலி அதிசிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள அதேநேரம், உயிர்முறைமைகள் தொழிநுட்பவியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில், சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர் மொஹைதீன் பாவா ரிஸா மொஹமட் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். இந்தத் தடவை பரீட்சையில் சித்தியடைந்த 1,60,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தத் தடவை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 3,21,469 பரீட்சாரத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமது அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், பெறுபேறுகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதாயின், 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112 78 42 08 / 011 2 78 45 37 / 011 31 88 350 அல்லது 011 3 14 03 14 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும். 2018 ஆம் ஆண்டுக்கான பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடுவதற்கு முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.