புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் உடன் விசாரணை முன்னெடுப்பு - அமைச்சர் சஜித் பிரேமதாச

by Staff Writer 28-12-2018 | 8:42 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினால், மாவனெல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கலாசார மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளூடாக உடன் விசாரணை நடத்தப்படுவதாக, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு, உடைத்து சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகள் தொல்பொருள் பெறுமதிமிக்கவை அல்ல என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச, அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார். எனினும், மக்களால் வழிபடப்பட்டுவந்த குறித்த புத்தர் சிலைகளை மீள ஸ்தாபிப்பது முக்கியமானது எனவும் அதற்கான நடவடிக்கையை தாமதமின்றி முன்னெடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதற்குத் தேவையான நிதி தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.