வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உணவு சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 28-12-2018 | 2:49 PM
Colombo (News 1st) உணவு சட்டத்தை மீறிய 1200 க்கும் அதிகமானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். இதனைத் தவிர, உணவு சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக, 12 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம், வர்த்தகர்களிடமிருந்து அறிவிப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பிலான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள சிறார்கள் தொற்றாநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் சிறார்களிடையே முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது, இந்த விடயம் கண்டறியப்பட்டதாக தொற்றாநோய்த் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன குறிப்பிட்டார். சிறார்கள் நாளாந்தம் உரிய முறையில் செயற்படாமை காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களில் 13 வயது முதல் 16 வயது வரையான மாணவர்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், 20 வீதமானோர் எவ்வித உடற்பயிற்சிகளும் இன்றி உள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலைமைகள், தொற்றாநோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் தொற்றாநோய்ப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.