டெங்கு நுளம்பு பெருக்கம்: சுகாதார அமைச்சர் ஆலோசனை

டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஆலோசனை

by Staff Writer 27-12-2018 | 4:51 PM
Colombo (News 1st) டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதால் அது தொடர்பில் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார். சீரற்ற வானிலை நிலவி வருவதால் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய குருதி பரிமாற்றகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை, அபாய வலயங்களில் புகை விசிறும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. பாடசாலைகள் மற்றும் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெறும் வலயங்களில் நுளம்புக் குடம்பிகள் உருவாகும் அபாயம் காணப்படுவதுடன், நுளம்புக் குடம்பிகள் காணப்படும் இடங்கள் தொடர்பில் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை, விடுமுறைக்காக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் எதிர்வரும் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் துப்பரவுப் பணிகளை முன்னெடுக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 49,132 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.