ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைப்பு

by Staff Writer 27-12-2018 | 4:18 PM
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல், 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்தநிலையில், அதனை எதிர்வரும் ஜூலை மாதத்தின் இடைப்பகுதியில் அல்லது ஆகஸ்ட் மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடைபெறவுள்ள தினம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலருக்கு, உரிய திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள முடியாது போனமையின் காரணமாக தேர்தலை பிற்போடுவதற்குத் தீர்மானித்ததாக ஆப்கன் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள தமது நாட்டு படையினரை அமெரிக்கா மீள அழைத்தமையை அடுத்து, தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஆப்கன் தலைநகர் காபூலில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 43 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதேவேளை, ஆப்கனில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் இதுவரை 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், வேட்பாளர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.