by Staff Writer 26-12-2018 | 3:06 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (26) காலை முதல் கடும் மழை பெய்துவருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் மீண்டும் வௌ்ள நிலைமை ஏற்படும் அபாயம் நிலவுகின்றது.
இந்தநிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வௌ்ள நிலைமை காரணமாக 15,167 குடும்பங்களைச் சேர்ந்த 47,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, 14 இடைத்தங்கல் முகாம்களில் 1,465 குடும்பங்களைச் சேர்ந்த 4,728 பேர் தங்கியுள்ளனர்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் 25 வீடுகள் முற்றாகவும் 414 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இரணைமடுக் குளத்தின் 9 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் 5 வான்கதவுகள் 1 அடி 5 அங்குலத்திலும் 4 வான்கதவுகள் 6 அங்குலத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தின் வடமராட்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமூகமான வானிலை நிலவி வருகின்றது.
ஏற்கனவே ஏற்பட்ட வௌ்ள நிலைமையினால் 8,025 குடும்பங்களைச் சேர்ந்த 25,889 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,625 குடும்பங்களைச் சேர்ந்த 5,108 பேர் 9 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
64 வீடுகள் முற்றாகவும் 801 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.