ஶ்ரீ.சு.கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று

by Staff Writer 24-12-2018 | 7:09 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று (24) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்தக் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச கூறியுள்ளார். இதில் அமைப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களை எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறை​வேற்றுக்குழு கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் காலை 8.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, கூட்டமைப்பின் அனைத்து பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார். நிகழ்கால அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் கட்சியினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்தோலோசிக்கப்படவுள்ளதாக ஷாந்த பண்டார குறிப்பிட்டார்.